Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரியார் பற்றி சர்ச்சை பேச்சு: ரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஜனவரி 17, 2020 07:20

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகக் கூறி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அவர் அரசியல் குறித்து பேசும் கருத்துகள் எல்லாம் சர்ச்சையைக் கிளப்பிவருகிறது.

துக்ளக் பொன்விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் செருப்பு மாலை போடப்பட்டது என்றும் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

பெரியாரிய அமைப்புகள் சம்பவத்தை திரித்துக்கூறுகிறார் என குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன் சீதை ஆகியோர் உருவங்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளிவந்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி அதன் வழியே தமிழ்நாட்டில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கோடும், தங்கள் எஜமானர்களை மகிழச் செய்ய வேண்டும் என பேசப்பட்டதாகவே நாங்கள் நம்புகிறோம். இந்த பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அதுமட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்பட்டு வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியாரியல் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சின்ன விஷயங்களுக்கெல்லாம் வழக்கு போடும் தமிழ்நாடு அரசு தங்களுடைய இயக்கத்தின் மூலவராக கருதப்படும் பெரியார் மீது செய்யப்பட்ட இழிவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாம் சில நாட்கள் கவனித்துப் பார்த்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது திரைப்படம் திரையிடப்படும் அரங்குகளுக்கு முன்னால் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு அனைவரும் தயாராக இருப்போமாக” என்று தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்